அன்பு மொழி கற்றிடலாம்


அ, ஆ என்றே என்றே சொல்லி

அன்பு மொழி கற்றிடுவோம்

இ, ஈ என்றே சொல்லி

ஈகைத்திறனை வளர்த்திடுவோம் !

உ, ஊ என்றே சொல்லி

ஊக்கம் தன்னை பெருக்கிடுவோம் !

எ, ஏ என்றே சொல்லி

ஏற்றம் கொண்டு வாழ்ந்திடுவோம் !

ஐ சொல்லி என்றே சொல்லி

ஐயம் தன்னை விரட்டிடுவோம்

ஒ, ஓ என்றே சொல்லி

ஒற்றுமையை உணர்த்திடுவோம் !

ஒள என்றே சொல்லி

ஒளவை வாக்கை காத்திடுவோம் !

ஃ என்றே சொல்லி

எஃகு மனிதராய் வாழ்ந்திடுவோம் !

A. நோயல் மேரி
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்.
புள்ளம்பாடி, VDV - 1080

தேனியின் தேடல்


வெற்றி

தேனைச் சேமிக்கிறது

தேடலால் தேனிக்கு வெற்றி

ஆனால்

நண்பனே ! உனக்கு

வெற்றி ஒன்றில்லை

ஆர்வத்துடன் பார்த்து

ஆவேசத்துடன் படித்து

சுறுசுறுப்பாய் எழுதினால்

என்றும் புன்னகைக் காலம்

ஒற்றுமையாய் நாம் தேடிய

வெற்றியுடன்

அலையின் ஆர்வம்

கரையைத் தொடுகிறது

ஆர்வத்தால் அலைக்கு வெற்றி

புயலின் ஆவேசம்

பூமியை மாற்றுகிறது

ஆவேசத்தால் புயலுக்கு வெற்றி

எறும்பின் சுறுசுறுப்பு

விரைவில் செல்கிறது

சுறுசுறுப்பால் எறும்பிற்கு வெற்றி

பூவின் புன்னகை

அனைவரையும் கவர்கிறது

புன்னகையினால் பூவிற்கு வெற்றி

காகத்தின் ஒற்றுமை

வேடனுக்கு ஏமாற்றம்

ஒற்றுமையால் காகத்திற்கு வெற்றி.


M.சுஜாதா
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்
புள்ளம்பாடி. MKT- 1037

எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விளக்கங்கள்


வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தார் போலக் கெடும்
எய்ட்ஸ் நோய் ஒரு விளக்கம் :

எய்ட்ஸ் என்பது பல நோய்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாகும். அது ஒரு உயிர்க்கொல்லி நோய், நோய் ஏற்பட்டுவிட்டால் குணப்படுத்த சிகிச்சை ஒன்றும் கிடையாது. ஆனால் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் வாழ்நாளை நீட்டிக்க செய்யலாம். எனவே எய்ட்ஸ் நோயினைப் பற்றிய விவரங்களை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

எய்ட்ஸ் என்ற சொல்லின் பொருள் :

Acquired - A ஒரு மனிதனிடமிருந்து மற்றொருவர் பெற்றுகொள்வது

Immune - I உடலின் எதிர்ப்பு சக்தி

Deficiency - D குறைத்துவிடுதல்

Syndrome - S பல நோய்களின் கூட்டுத் தொகுப்பு

இந்நோய் முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது. 1986 ஆம் ஆண்டு நம் நாட்டில் சென்னையில் எய்ட்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் இருப்பதை அறிந்து நமக்கெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டது. நம் நாட்டில் இதுவரை பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மிக அதிகமானவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ளனர்.

எய்ட்ஸ் நோய் வருவது எப்படி ?

எய்ட்ஸ் நோய் வருவது காரணமாக இருக்கும் கிருமியின் பெயர் எச்.ஐ.வி. இக்கிருமி மனித உடலில் புகுந்து விட்டால் அந்த உடல் இயல்பாக பெற்றிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழித்துவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாத காரணத்தால் காசநோய், புற்றுநோய், மூளைக்காய்ச்சல், கட்டுப்படாத வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களுக்கு உட்பட்டு மனிதன் மரணத்திற்கு தள்ளப்படுகிறான்.

எய்ட்ஸ் நோயின் அறிகுறிகள் :

உடல் எடை மிக வேகமாக குறைதல், ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல், ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் இருமல், ஒரு மாதத்திற்குமேல் தொடர்ந்து வயிற்றுப்போக்கு, உடல் அரிப்புடன் கூடிய தோல்வியாதி ஆகியவை ஆகும். இத்தொற்றுநோயை அறிய இரத்தப்பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்.

எய்ட்ஸ் நோய் பரவும் விதம் :

எய்ட்ஸ் நோய்க்கான கிருமி, உடலில் உள்ள இரத்தம், ஆண் விந்து, பெண் உறுப்பு திரவம் மற்றும் இந்நோயினால் பாதித்த தாயின் தாய்ப்பால் ஆகிய இடங்களில் அதிகமாக வாழ்கிறது. எனவே இந்நோய் கீழ்க்கண்ட விதங்களில் பரவுகிறது.


  1. உடல் உறவு கொள்ளும் இருவரில் யாரேனும் ஒருவர் எய்ட்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்போது "வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்"
  2. எய்ட்ஸ் வைரஉள்ளவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்து, ஊசி குழல் சரியாக சுத்தம் செய்யப்படாமல் மற்றவருக்கு பயன்படுத்தும்போது
  3. இக்கிருமி உள்ளவர் இரத்தத்தை பிறருக்கு செலுத்தும்போது
  4. இவ்வைரஉள்ள தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு எய்ட்ஸ் ஏற்பட்டுவிட்டால் இன்று அதற்கான சிகிச்சை கிடையாது / மருந்து கிடையாது.


மேலும் எய்ட்ஸ் வராமல் தடுக்க தடுப்பூசி கிடையாது. எனவே ஒவ்வொருவரும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து, எய்ட்நோயிலிருந்து தங்களையும் பாதுகாத்து, பிறருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளையும் எடுத்துச் சொல்லி எய்ட்மனித சமுதாயத்திற்கு தந்துள்ள சவாலை எதிர்கொள்ளவேண்டும்.

நோய் தொற்றக்கூடிய அபாயமுள்ளவர்கள் :


  1. பால்வினை நோய்க்கு ஆளானவர்கள்
  2. பிறப்பு உறுப்பில் புண்களை உடையவர்கள்,
  3. பல்வேறு நபர்களோடு உடலுறவு கொள்பவர்கள், 
  4. பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்பவர்கள், 
  5. போதை பொருட்களை உபயோகிப்பவர்கள்.


எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ?

1. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தத்தில் வாழ்வது, 2. தகாத உடலுறவு கொள்வதை தவிர்ப்பது, 3. தொற்று நீக்கம் செய்யப்பட்ட ஊசி மற்றும் ஊசி குழல்களை பயன்படுத்துதல், 4. இரத்த தானம் பெறும்போது எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்ட இரத்தத்தை தானமாக பெறுவது

எய்ட்ஸ் நோய் எதனால் பரவாது ?

  1. எச்.ஐ.வி.பாதித்த நபருடன் கை குலுக்குவதால், 
  2. காற்று, நீர் போன்றவற்றால்,
  3. கொசு மூலம், 
  4. இந்நோய் உள்ளவர்களுடன் சேர்ந்து விளையாடுவதால்

ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையம் :

நம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆற்றுப்படுத்துதலும், இரத்தப்பரிசோதனையும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆலோசனை விவரங்களும், பரிசோதனை முடிவுகளும் இரகசியமாக பாதுகாக்கப்படும். பரிசோதனை முடிவில் எச்.ஐ.வி. உள்ளவர்கள் என்று தெரியவந்தால் ஆற்றுப்படுத்துதலும், அவர்கள் தொடர் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுவார்கள்.

எச்.ஐ.வி.உள்ள கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி.இல்லாத குழந்தையைப் பெற முடியுமா? முடியும்.

கர்ப்பிணிப் பெண் பிரசவ வலி ஏற்பட்டவுடன் நெவிரப்பின் என்ற மாத்திரை கொடுப்பதாலும், குழந்தை பிறந்தவுடன் குழந்தை எடைக்கு தகுந்தாற்போல் ஒரு கிலோவிற்கு 2.மி.கி. நெவிரப்பின் மருந்து கொடுப்பதாலும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி.பரவுவதை தடுக்க முடியும். இந்த வசதி அனைத்து அரசு மருத்துவனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உள்ளது. இங்கு இவர்களுக்கு எச்.ஐ.வி.இல்லாத குழந்தையை பெற்றெடுக்க ஆலோசனையும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

எனவே மக்கள் அனைவரும் இந்நோய் பற்றி உணர்ந்து விழிப்புணர்வோடு செயல்படவேண்டும்.

எய்ட்ஸ்  வருமுன் யோசி ! வந்தபின்பும் வாழ்வை நேசி !!

கவிதை


மானாக இருந்தால்

குதித்து வந்து பார்ப்பேன்

மயிலாக இருந்தால்

ஆடி வந்து பார்ப்பேன்

ஆனால் !

நான் மனிதனாக உள்ளேன்

என் அன்பு எப்பொழுதும்

உங்களை பார்த்துக்கொண்டிருக்கும்.

M.அனுசுயா
St. ஜான் பிரிட்டோ ஹாஸ்டல்
JKM - 1053

தொழிலாளி - மேசை துடைக்கும் குழந்தை


துள்ளி சென்றே பயிலும் வயதில்

துடைக்க வந்துவிட்டான் - மேசை

துடைக்க வந்துவிட்டான் - ஐயோ !

கொல்லன் உலையாய்க் கொதிக்கும் நெஞ்சில்

கொட்டி எரித்துவிட்டான் - ஆசையைக்

குறைவறப் போக்கி விட்டான்

கண்ணைத் திறந்தே உலகைக் காட்டும்

கல்வியை இழந்துவிட்டான் - சோகக்

கதையாய் உருவெடுத்தான்

அன்னை தந்தை ஏற்றிய சுமையை

அரும்பில் சுமக்கிறான் - துயரில்

ஆழ்ந்து நெளிகின்றான்

எட்டாக் கிளையில் கிட்டாக் கனியாய்

இருக்கும் கல்வியினை - உண்டால்

இனிக்கும் நல்லமுதைத்

தொட்டுப்பிடித்துச் சுவைத்து மழைத்

துணைவருவார் யாரோ ? - இவன்

துயர்தீர்ப்பார் யாரோ ?

வி.ஜெனிட்டா

ஏழையின் இரக்கம் - (சிறுகதை)


சுப்பையா ஒரு கூலித் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வயிற்றுக்கு உணவு. அவருக்கு ஐந்து பெண்கள். சுப்பையா கஷ்டப்பட்டு தன் ஐந்து மகள்களையும் படிக்க வைத்தார். ஒரு நாள் சுப்பையா தன் மகள்களை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியூருக்குக் கூலித் தொழில் செய்ய சென்றார். அவர் மனைவி மகள்களை சித்தாள் வேலைக்குச் சென்று உணவும், பாடப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து வளர்த்து வந்தார். வெளியூருக்குச் சென்ற சுப்பையா அங்கு சுனாமியால் தன் தாய், தந்தையை இழந்து ஒரு பெண்ணை வீட்டிற்கு கொண்டு வந்தார். சுப்பையா வீட்டில் கஷ்டம் இருந்தும் அந்தப் பெண்ணையும் தம் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். சுப்பையா தன் ஐந்து மகள்களைப் போல அந்தப் பெண்ணையும் படிக்க வைத்தார். சுப்பையா கூலி வேலை செய்துக் கஷ்டப்பட்டாலும் அந்த பெண்ணையும் தம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட மனதிருப்தி அவரிடம் இருந்து, அந்த ஆறு பெண்களும் நன்றாகப் படித்து சுப்பையாவை ராஜா போல் ஆக்கினர்.

ஒரு மனிதன் சிறிய வயதில் எவ்வளவு கஷ்டப்படுகிறானோ பெரிய வயதில் அவ்வளவு மகிழ்ச்சியடைவான். கஷ்டப்பட்டால் மட்டும் போதாது ஒரு மனிதரிடம் இரக்கமும் இருக்க வேண்டும்.

- S. SHEEBA, JKM - 1024

மனித உரிமைகள் மீறல் என்றால் ?


ஒவ்வொரு மனிதனுடைய மனித உரிமைகளையும் காப்பதற்குரிய செயல்படுத்த கட்டுப்பாடும் அரசுக்கு உண்டு. அதனை செயல்படுத்த இயலாத நிலையில் அரசோ, காவல்துறை அரசு அதிகாரிகள், வனத்துறை, ஆயுதப்படை அதிகாரி, அரசு சார்பாக ஒப்பந்தக்காரரைப் போல் செயல்படுகின்ற எவரேனும் ஒருவர் அடுத்தவரின் மனித உரிமையில் தலையிட்டோ மரியாதைக் குறைவாக நடத்துகிறார் எனில் அவைகளும், மனித உரிமைகள் மீறல்களே. மனித உரிமைகள் அரசுக்கு எதிராகவே கோரப்படுகின்றது. தனி மனிதர்களுக்கு எதிராக கோரப்படுவதில்லை. இருப்பினும் ஒரு தனி மனிதன் இன்னொருவரின் வாழ்வுரிமைகளான சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் தொடர்பான உரிமைகளை மீறினால் பாதிக்கப்பட்டவர் அந்த உரிமை மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசினை அணுக முடியும். அரசு அந்த உரிமையை மீறுவோருக்கு தண்டனை வழங்கவோ (அல்லது) தடுத்து நிறுத்தவோ தவறினால் அப்போது அது மனித உரிமை மீறலாக மாறுகிறது.

மனித உரிமை மீறலுக்கான சில வரையறைகள் :

மக்களுடைய வீடுகள், நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றில் தொழிற்சாலையால் வெளியிடப்படும் நச்சு, வேதியியல் கழிவுகள் கலக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறுவதே

வாழ்வுரிமை மீறலாகும்.

- காவலரால் சந்தேகப்பட்டு அடித்தல், விலங்கிடல் மற்றும் சித்ரவதை செய்தல் என்பன மனித மாண்பு மற்றும் உடல் பாதுகாப்புக்கு எதிரான உரிமை மீறலாகும்.

- ஒரு பெண் சிறைக் கைதி சிறைக்காப்பாளரால் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்ற புகார் அடிப்படையில் குற்றவியல் நடுவர் நடவடிக்கை எடுக்க தவறுதல் சட்டப்படி சம பாதுகாப்பளிக்கும் உரிமை மீறலாகும்.

- தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு கோவிலில் வழிபட, கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கத் தடுக்கின்ற உயர் சாதி மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மறுத்தல் பாகுபாடு சார்ந்த உரிமை மீறலாகும்.

வேலைத் தளங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியம் கொடுக்கப்படுவதையும், பணி உயர்வில் சம வாய்ப்பு கொடுக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கு முதலாளிகளுக்கான சட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையினர் புறக்கணித்தல் சம வாய்ப்பிற்கான உரிமை மீறலாகும்.

பாதுகாப்பு படையில் பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு கடையின் சொந்தகாரருக்கு இழப்பீடு கொடுக்காமல் எடுத்துக் கொள்ளுதல். வாழ்வாதார உரிமை மீறலாகும்.

மாவட்ட நிர்வாகம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக வெளியிட மறுத்தல் செய்தி பெறும் உரிமை மீறலாகும்.

புலனாய்வுக் குழுமத்தால் முகம்மதியர் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு மதபாடங்கள் கொடுக்கப்படுவதை அவர்கள் தேச விரோதிகள் என்று காரணங்களை காட்டி மறுத்தல் மதவுரிமை மீறலாகும்.

வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட காடு அழிக்கப்படுவதையும், சட்டத்திற்குப்புறம்பாக மரங்கள் வெட்டப்படுவதையும் கட்டுப்படுத்த இயலாதிருந்தால் சுற்றுச்சூழல் உரிமை மீறலாகும்.

அரசு என்பது மத்திய மாநில அரசுகளையும் மேலும் நாட்டை நிர்வகிக்க உதவுகின்ற நிறுவனங்கள் முகவாண்மைகள் ஆகியவைகளை உள்ளடக்கிய அனைத்து மக்களையும் குறிக்கும். மாவட்ட ஆட்சி அலுவலர்கள் ஊராட்சி அமைப்புகள், நீதி மன்றங்கள், நகராட்சி, அஞ்சல்துறை, மின்சாரத்துறை, அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான அரசின் கட்டுப்பாட்டிற்குள்ள குழுக்கள் அனைத்துமே அரசின் அங்கமாகவே குறிக்கப்படும்.

தகவல் தொகுப்பு :
A.ஆலீஸ்மேரி